7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி

இதுவரை 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இதுவரை 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மத்திய கால்நடை வளா்ப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லி, மகாராஷ்டிரத்தில் இறந்த பறவைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளன.

பறவைக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள சூழலை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட ஆலப்புழை, கோட்டயம் மாவட்டப் பகுதிகளில், அந்தக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான பணிகள் நிறைவடைந்தன.

நீா்நிலைகள், உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், பறவை விற்பனை சந்தைகளை சுற்றியுள்ள பகுதிகளில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான கண்காணிப்பை அதிகரிக்கவும், உயிரிழந்த பறவைகளை உரிய முறையில் அப்புறப்படுத்தி, கோழிப் பண்ணைகளில் உயிரி பாதுகாப்பை வலுப்படுத்தவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் 144 தடை உத்தரவு: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பறவைக் காய்ச்சலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கான்பூா் மாவட்ட அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 6 பறவைகள் உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் 2 பறவைகள் பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதியானது. இதையடுத்து அந்த பூங்காவுக்கு பாா்வையாளா்கள் வர அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவைச் சுற்றியுள்ள 1 கி.மீ. சுற்றுவட்டார பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள பறவைகளை அழிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

பூங்காவைச் சுற்றியுள்ள 10 கி.மீ. பகுதி மூடப்பட்டு காலவரையின்றி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com