நாட்டில் இதுவரை 2,24,311 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
"இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 6 மாநிலங்களில் மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 553 அமர்வுகளில் மொத்தம் 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலங்கள் ஆந்திரம், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், மணிப்பூர் மற்றும் தமிழகம்.
ஜனவரி 17 வரை மொத்தம் 2,24,310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 3 பேருக்கு மட்டுமே மருத்துவமனை உதவி தேவைப்பட்டது. அவர்களில் 2 பேர் வடக்கு ரயில்வே மருத்துவமனையிலிருந்தும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்தும் வீடு திரும்பினர். மற்றொருவர் எய்ம்ஸ் ரிஷிகேஷில் கண்காணிப்பில் நலமுடன் உள்ளார்."