புது தில்லி: இடைவேளைக்குப் பிறகு, தென்மேற்குப் பருவமழை விரைவில் தீவிரமடையும், பருவமழை தொடங்காத தில்லி உள்பட மற்ற வட இந்திய மாநிலங்களிலும் ஜூலை 10ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கிடைத்திருக்கும் பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில், தென்மேற்குப் பருவமழை நாட்டில் மெல்ல தீவிரமடையும். ஜூலை 8 முதல் மேற்கு கடற்கரை மற்றும் அதனுடன் இணைந்த கிழக்கு மத்திய இந்தியப் பகுதிகளிலும் பருவமழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு - மத்திய மற்றும் அதனுடன் இணைந்த வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவின் கடற்கரையை ஒட்டி ஜூலை 11ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகும். இதன் மூலம், வங்கக் கடல் பகுதியிலிருந்து கிழக்கு திசைக் காற்றின் ஈரப்பதம் மெல்ல கிழக்கு இந்திய மாநிலங்களில் ஜூலை 8 முதல் பரவும்.
இது மேலும் ஜூலை 10 முதல் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 10 முதல் நாட்டில் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.