கட்சியை தேர்தலுக்குத் தயார்படுத்தும் வகையில், சமூகத்தின் பலவீனமான பகுதிகளிலிருந்து அதிகமான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தவும் மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏற்படுத்தியுள்ளார்.
கரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட எதிர்மறை தாக்கத்தால், மத்திய அமைச்சரவையில் மிக முக்கிய அங்கம் வகித்து வந்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், ரவி ஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கரோனா இரண்டாம் அலையின்போது நாட்டின் உயர்ந்த நீதித் துறையின் கடுமையான கேள்விகளுக்கு மத்திய அரசு ஆளானதைத் தொடர்ந்து, ரவி ஷங்கர் பிரசாத் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியாமல் போனது. புதிய சட்ட அமைச்சராக கிரெண் ரிஜிஜு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அமைச்சராக இருந்த ஜாவ்டேகர், மத்திய அரசின் முதல் செய்தித் தொடர்பாளராக செயல்படத் தவறியதால், அவருக்கும் மத்திய அமைச்சர் பதவி பறிபோனது. புதிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அனுராக் தாக்கூர் இடம்பெற்றுளளார்.
இதையும் படிக்கலாமே.. 12 மத்திய அமைச்சா்கள் ராஜிநாமா
கரோனா இரண்டாம் அலையின் போது தீவிரமாக செயல்படத் தவறியதால், ஹர்ஷ் வர்தன், மன்சுக் மாண்டவியாவிடம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையை விட்டுக் கொடுக்க நேரிட்டது. இவர் பேரிடர் காலத்தில் பல கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை உடனடியாகக் கிடைக்கும் வகையில் செயல்பட்டவர்.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் வெளியேற்றப்பட்டவர்களில் ரமேஷ் பொக்ரியாலும் ஒருவர். இவரது கல்வித் துறை தர்மேந்திர பிரதானுக்கு வழங்கப்பட்டுள்ளது. சதானந்த கௌடா தனது ரசாயனம் மற்றும் உரத்துறைப் பதவியை இழந்தார். மன்சுக் மாண்டவியா இந்தப் பொறுப்புகளை கூடுதலாக கவனிக்கிறார்.
இதேபோல், தொழிலாளா் நலத் துறை தனிப் பொறுப்பு அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா், இணையமைச்சா்களான பாபுல் சுப்ரியோ (வனம், சுற்றுச்சூழல்), சஞ்சய் டோத்ரி (கல்வி), ரட்டன் லால் கட்டாரியா (ஜல் சக்தி), பிரதாப் சந்திர சாரங்கி (சிறு, குறு, நடுத்தர தொழில்கள்), தேவஸ்ரீ சௌதரி (மகளிா் மற்றும் குழந்தைகள் நலன்) ஆகியோரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.
நேற்று 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதில் முதல் ஆளாக நாராயண் ராணே மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இது மகாராஷ்டிரத்தில் இன்னமும் சிவ சேனையின் பின்னால் இருந்து கொண்டு வெற்றியைக் காண விரும்பவில்லை என்பதையும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில், கொங்கன் பகுதியில் தங்களுக்கான ஆதரவை விரிவாக்கிக் கொள்ள விரும்புவதையும் காட்டுகிறது. இவர் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதையும் தெரிந்து கொள்ள.. கேபினட் அமைச்சர்களின் வாழ்க்கைக் குறிப்பு
எதிர்பார்த்தது போலவே, அசாம் முன்னாள் முதல்வர் சா்வானந்த சோனோவால் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பாஜக அரசை கட்டமைத்த ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையின் புதிய அமைச்சராக சிந்தியா பொறுப்பேற்றுள்ளார். ஆச்சரியமளிப்பது என்னவென்றால், அவரது தந்தை மாதவராவ் சிந்தியா, 1992ஆம் ஆண்டு விமான விபத்துக்கு பொறுப்பேற்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்பது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், முக்கிய உதவியாளராக இருக்கும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், மத்திய அமைச்சரவையில் இணைந்துள்ளார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலன் துறையை ஏற்றுள்ளார். அமித் ஷாவுக்கு உள்துறையுடன் கூடுதலாக கூட்டுறவுத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு நுழைந்த அஸ்வனி வைஷ்ணவ் மத்திய அமைச்சரவைக்குள் நுழைந்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பதவிக் காலத்தில் பாஜகவுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டவர். இவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
நாராயணசாமி (கர்நாடகம்), கௌஷல் கிஷோர் (உ.பி.), எல். முருகன் (தமிழ்நாடு) உள்பட பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்களும் உள்ளனர். எனவே, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றும் வகையில் சமூக சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருப்பது தெரிகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்சிபி சிங் (ஐக்கிய ஜனதா தளம்), பசுபதி பாரஸ் (எல்ஜேபி) ஆகியோர் மத்திய அமைச்சர்களாகவும், அனுபிரியா படேல், அப்னாதால் ஆகியோர் இணை அமைச்சர்களாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மாண்டவியா, புருஷோத்தம் ரூபலா ஆகியோர் பாட்டிதார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டு, அந்த சமுதாய மக்களிடையே கட்சியை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து ஷோபா கரண்ட்லஜே, தில்லியிலிருந்து மீனாக்ஷி லேகி, மேற்கு வங்கத்திலிருந்து நான்கு புதிய முகங்கள் இணைக்கப்பட்டிருப்பது, இந்த மாநிலங்களில் பாஜகவின் பலத்தை அதிகரிக்க மோடி எடுத்திருக்கும் முடிவாகவே பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர்களின் சராசரி வயது 56 ஆக உள்ளது. இது தான் பிரதமர் மோடியின் அமைச்சரவையின் மிகக் குறைந்த சராசரி வயதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


