ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படைத்தளபதி உள்பட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மூவர் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில், காவல்துறை, மத்திய துணை ராணுவப்படை அடங்கிய குழு தேடுதல் வேட்டை நடத்தியது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் தப்பிக்காதவாறு அனைத்து வழிகளும் முடக்கப்பட்டன.
தப்பிக்க வழியே இல்லை என பயங்கரவாதிகள் உணர்ந்தவுடன் பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இன்று காலை வரை தொடர்ந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்" என்றார்.
இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார் கூறுகையில், "சுட்டுக்கொல்லப்பட்ட மூவரில் இருவர் உள்ளூர்வாசிகள். மற்றொருவர் பாகிஸ்தானியர். அவரின் பெயர் அய்ஜாஸ் என்ற அபு ஹுரைரா. இவர்தான், அமைப்பில் படைத்தளபதியாக செயல்பட்டார்" என்றார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 15 நாள்களில், எட்டு முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.