கேரளத்தில் கோழிக்கறியின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால், தங்களது உணவுப்பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க கேரள உணவகங்கள் முடிவு செய்துள்ளது.
கேரளத்தில் கோழிக்கறியின் விலை நேற்றைய நிலவரப்படி (வெள்ளிக்கிழமை) இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறியின் விலை கடந்த மாதம் ரூ.86 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரள உணவகங்கள் தங்கள் உணவுப்பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள விடுதி மற்றும் உணவக சங்கத்தின் தலைவர் மொயிதீன்குட்டி ஹாஜி, கேரளத்தில் 80 சதவிகித கோழிக்கறியை உணவகங்களே வாங்குகின்றன. ஏற்கனவே கரோனா தொற்று பரவல் காரணமாக வாடிக்கையாளர்கள் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட கேரள அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் கோழிக்கறியின் விலை உயர்வின் காரணமாக, பொருளாதார ரீதியாக உணவகங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இதனால் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது கடினமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, கோழிகள் தட்டுப்பாடின்றியும், நியாயமான விலையிலும் கிடைக்க வழி செய்யும் என நம்புகிறோம்'' என்று தெரிவித்தார்.
கேரள கோழி வளர்ப்போர் சங்கம் தெரிவித்ததாவது, ''தற்போது மூன்றாவது அலை குறித்து அறிவுறுத்தப்பட்டிருப்பதால், மார்க்கெட் விலையை விடக் குறைவான விலைக்கு கோழியை விற்பனை செய்ய வேண்டி வருமோ? என கோழி வளர்ப்போரிடையே அச்சம் நிலவுகிறது. உள்நாட்டில் உற்பத்தியும் குறைவாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்'' என்றார்.