

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாளை காலை 11 மணிவரை நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று காலை கூடிய மக்களவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து பேசினார். அப்போது, பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னைகள், பத்திரிகையாளர்கள் உரையாடலை உளவு பார்த்தது தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனது அறிமுக உரையை அறிக்கை மூலம் பிரதமர் தாக்கல் செய்ததையடுத்து, மக்களவை பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்பு கூடிய மக்களவையில், பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்த பின்னர் நாளை காலை வரை அவையை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அதேபோல் இன்று காலை கூடிய மாநிலங்களவையில் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு அமளி காரணமாக அவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்களவையில், பிரதமர் உரையின் போது வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு,பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.