பெகாஸஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்னைகளால் மாநிலங்களவை முடங்கியுள்ளது. மழைக்காலக் கூட்ட தொடர் தொடங்கி இரண்டு வார காலத்தில் 80 சதவிகித வேலை நேரம் வீணாகியுள்ளது.
முதல் வாரம் மொத்த வேலை நேரத்தில் 32.2 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களவை இயங்கியுள்ளது. இரண்டு வாரங்களை சேர்த்தால் 21.6 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களவை செயல்பட்டுள்ளது.
முதல்முறையாக, தினசரி அவை நடப்பு குறித்து மாநிலங்களவை செயலகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 130 பூஜ்ய நேரமும் 87 சிறப்பு குறிப்பு நேரமும் நடத்த முடியாமல் முடங்கியது. மொத்தமுள்ள 50 மணி வேலை நேரத்தில், 39.52 மணி நேரம் அமளியால் முடங்கியிருக்கிறது.
திட்டமிட்ட நேரத்தை காட்டிலும் 1.12 மணி நேரம் மாநிலங்களவை அதிகமாக செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை மொத்தமாக ஒன்பது முறை கூட்டப்பட்டுள்ளது. அதில், 1.38 மணி நேரத்தில் மட்டும் கேள்வி நேரம் நடத்தப்பட்டுள்ளது.
கடற்பயண வழிகாட்டு உபகரணங்கள் மசோதா 2021, சிறார் நீதி திருத்த மசோதா 2021, காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா 2021, தென்னை வளர்ச்சி வாரியம் திருத்த மசோதா 2021 ஆகிய நான்கு மசோதாக்களை நிறைவேற்ற 1.24 மணி நேரம் செலழிக்கப்பட்டுள்ளது.
கேள்வி நேரம், சிறப்பு குறிப்பு நேரம் ஆகியவற்றில் மக்களின் பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பலாம். அதற்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.