நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் குறைவான அளவில் பதிவாகியுள்ளது. பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் கரோனா பாதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
அதாவது, நேற்று 1,32,364 பேருக்கு கரோனா உறுதி செய்யபட்ட நிலையில், இன்று 1,20,529 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 11,835 குறைவாகும்.
இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,55,248 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 80,745 குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 3,380 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 3,44,082-ஆக அதிகரித்துள்ளது.
23-வது நாளாக, புதிய பாதிப்புகளைவிட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 1,97,894 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் மூலம் நம் நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 2,67,95,549 -ஆக இன்று பதிவாகியுள்ளது.