லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை அனைத்து மாவட்டங்களிலும் 600க்குக் கீழ் குறைந்த நிலையில், பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் இந்த தளர்வுகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தில் புதன்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாள்களும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படும். அதே வேளையில், அனைத்து நாள்களிலும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இது அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் 14 ஆயிரம் கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.