வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: 3 மாணவர்களின் ஜாமீனுக்கு எதிராக தில்லி காவல் துறை மேல்முறையீடு

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வட கிழக்கு தில்லி வன்முறை தொடர்பான வழக்கில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் நட்டாஷா நர்வால்
வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கு: 3 மாணவர்களின் ஜாமீனுக்கு எதிராக தில்லி காவல் துறை மேல்முறையீடு


புது தில்லி: கடந்த ஆண்டு பிப்ரவரியில் வட கிழக்கு தில்லி வன்முறை தொடர்பான வழக்கில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் நட்டாஷா நர்வால், தேவாங்கனா கலிதா மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆசிஃப் இக்பால் தன்கா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறைச் சம்பவம் தொடர்புடைய வழக்கில் அவர்கள் மூவரும் தில்லி காவல் துறையினரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். 
இதைத் தொடர்ந்து , இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் தனித்தனியாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 
இதையடுத்து, மூவர் தரப்பிலும் தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், அனுப் ஜெய்ராம் பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், யுஏபிஏ சட்டத்தை அடக்கும் முறையில் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மூவரின் ஜாமீனுக்கு எதிராக தில்லி காவல் துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "சம்பந்தப்பட்ட ஜாமீன் தொடர்புடைய விவகாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் சரத்துகளை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்ட விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. 
இதனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
குற்றப்பத்திரிகையில் கட்செவி அஞ்சல் குறுந்தகவல்கள், சமூக ஊடகத்தில் வெளியான பதிவுகள் போன்றவற்றை ஆதாரமாக அளித்திருந்தபோதிலும் நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ள தவறிவிட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com