லட்சத்தீவுகளின் நிர்வாகியால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை பிறப்பித்து உத்தரவிட்டது.
சுற்றுலாவிற்கு பெயர் போன லட்சத்தீவுகளில் அதன் நிர்வாகி பிரந்புல் கோடா படேல் பிறப்பித்து வரும் உத்தரவுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.
குறிப்பாக கேரள மாநிலம் லட்சத்தீவுகளின் நிர்வாகியின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து லட்சத்தீவுகளின் நிர்வாகி பிறப்பித்த பால் பண்ணைகள் மூடல் மற்றும் பள்ளிகளில் மதிய உணவில் மாட்டிறைச்சியைத் தடை செய்வது உள்ளிட்ட இரண்டு உத்தரவுகளுக்கு கேரள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்க லட்சத்தீவுகள் நிர்வாகத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதுவரை இந்த இரண்டு உத்தரவுகளின் மீது எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.