தமிழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துக: மத்திய அரசு 

மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துக: மத்திய அரசு
தமிழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துக: மத்திய அரசு

சென்னை:  தமிழகத்தில் டெல்டா பிளஸ் கரோனா தொற்று வகை கண்டறியப்பட்டுள்ள மதுரை, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் வெ இறையன்புவிற்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா பிளஸ், கவலை அளிக்கக்கூடிய தொற்று வகை என்று மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த வகைத் தொற்று, அதிகமாகப் பரவுவதுடன், நுரையீரலை பாதித்து, மோனோக்ளோனல் என்ற நோய் எதிர்ப்பொருளின் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது.

இது சம்பந்தமாக பொது சுகாதார நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.  இந்த மாவட்டங்கள் மற்றும் தொகுப்புகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது; தடமறிதல், தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னுரிமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மருத்துவத் தொற்று நோயின் தொடர்பை கண்டறிவதற்கு ஏதுவாக தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் போதிய மாதிரிகள் மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com