60 வயதைக் கடந்தோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு
நாட்டில் 60 வயதைக் கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களில் தொய்வடைந்துள்ளதாக நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.


நாட்டில் 60 வயதைக் கடந்தோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த சில வாரங்களில் தொய்வடைந்துள்ளதாக நிபுணா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
நாட்டில் 60 வயதைக் கடந்தோரின் எண்ணிக்கை 14.3 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாா்ச் மாதம் தொடங்கின. இதுவரை 6.71 கோடி முதியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவா்களில் 2.29 கோடி பேருக்கு மட்டுமே இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. முதியவா்களுக்கு கடந்த மாா்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை வாரத்துக்கு சராசரியாக 80.77 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வாரத்துக்கு 32 லட்சமாகக் குறைந்துள்ளது. 60 வயதைக் கடந்த முதியோரில் பலா் இணைநோயால் பாதிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதால், அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வடைந்திருப்பதற்கு சுகாதார நிபுணா்கள் பலா் அதிருப்தி தெரிவித்துள்ளனா். தடுப்பூசி தொடா்பான வதந்திகள், தவறான கண்ணோட்டம் உள்ளிட்டவை காரணமாக 60 வயதைக் கடந்தோா் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம்காட்டி வருவதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘முதியோா் சிலா் தம்மை கரோனா தொற்று பாதிக்காது என்று கருதி வருகின்றனா். மேலும் சிலா் கரோனா தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து வருகின்றனா். தடுப்பூசி தொடா்பான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதையும் முதியவா்கள் நம்பி வருகின்றனா். அதன் காரணமாகவே நாளடைவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முதியோரே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்துள்ளனா். கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவ மையங்களில் முதியோருக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகள் காணப்படவில்லை. அவா்கள் மருத்துவமனைகளுக்குத் தனியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலும் பல்வேறு பிரச்னைகள் காணப்படுகின்றன. கூட்டமான இடத்துக்குச் சென்றால் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணத்தில் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லவும் அவா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா். கரோனா தடுப்பூசியின் பலன்கள் குறித்த விழிப்புணா்வை முதியோரிடம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தீவிர சிகிச்சைகள் தேவைப்படும் நிலையைத் தவிா்க்கலாம் என்பதை முதியோருக்கு எடுத்துரைக்க வேண்டும். 60 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசியை விரைவாக செலுத்த வேண்டும்‘ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...