கரோனா தொற்று பேரிடர் காரணமாக நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்க அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை சுட்டிக்காட்டி பியூ நிதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கரோனா பேரிடரால் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை குறைந்து ஏழ்மையை அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிழப்பு, வருமானம் குறைதல், அதிகரித்த விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளால் 9.9 கோடியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 6.6 கோடியாக சுருங்கிவிட்டதாகவும் நாளொன்றுக்கு ரூ.140க்கும் குறைவாக வருமானம் கொண்டவர்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்ட வறுமைநிலை காரணமாக மக்கள் வெளிநாடுகளில் வேலை தேடும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
முன்னதாக கரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் 2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.6 கோடி மக்கள் வறுமை நிலைக்கு செல்வர் என ஐக்கிய நாடுகளின் அவை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.