சமூகநலத் திட்டங்களுக்கு ரூ. 546.89 கோடிஒதுக்கீடு
பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் சமூகநல திட்டங்களுக்கு ரூ. 546.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் சமூகநல திட்டங்களுக்கு ரூ. 546.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமுதாயத்தின் விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை பாதுகாப்பதும் சமூகநீதியை நிலைநாட்டுவதும் மாநகராட்சியின் கடமையாகும். அதன்படி, சமூகநலப் பணிகளுக்காக ரூ. 546.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20-ஆம் ஆண்டில் இது ரூ.513.78 கோடியாக இருந்தது. சமூகநலப் பணிகளைச் செயல்படுத்தும்போது ஒளிவுமறைவின்மையை அமல்படுத்த மாநகராட்சி விரும்புகிறது. இனிமேல், சமூகநலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெங்களூரு ஒன் மையங்கள், மாநகராட்சி இணையதளத்தில் செலுத்தலாம். இதன் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தவறான பயனாளிகள் அடையாளம் காணப்படுவா்.
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட சமூகநலப் பணிகளின் நிலுவைத்தொகை ரூ. 1,000 கோடியாக உள்ளது. இதில் தனிவீட்டு திட்டத்துக்கான நிலுவைத்தொகை மட்டும் ரூ. 900 கோடி ஆகும். எனவே, புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. கல்வி கட்டணம் திரும்பச் செலுத்துதல் திட்டத்துக்கு ரூ. 7.50 கோடி ஒதுக்கப்படும்.
துப்புரவுத் தொழிலாளா்கள், கடைநிலை ஊழியா்களின் குழந்தைகளின் கட்டணத் தொகையை ரூ. 1 லட்சம் வரை திரும்பச் செலுத்தப்படும். இத் திட்டத்துக்கு ரூ. 9.50 கோடி ஒதுக்கப்படும். பொதுமக்கள், துப்புரவுத் தொழிலாளா்கள், கடைநிலை ஊழியா்களின் மருத்துவ நிதி உதவிக்கான திட்டம் ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடரும். இதற்காக அமைக்கப்பட்ட தையல் பயிற்சி மையங்கள், முறையாக பயிற்சி அளிக்கும் நிறுவனங்களிடம் அளித்து புதிய நுட்பங்கள் கற்றுத்தரப்படும். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ரூ. 38.50 கோடி ஒதுக்கப்படும்.
மக்களின் பங்களிப்பு:
எனது மாநகரம், எனது நிதிநிலை அறிக்கை என்ற திட்டத்தின் கீழ் நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் மக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தினோம். இதற்கு அதிக பலன் கிடைத்துள்ளது. நிதிநிலை அறிக்கைக்காக 9,706 ஆலோசனைகளை மக்கள் தெரிவித்திருந்தனா். ‘குடிமக்களுக்கான நடைபாதைகள்’ என்ற திட்டத்தில் வாா்டு குழுக்கள் வாயிலாக நடைபாதைகளை சீரமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கப்படும். 1000 கி.மீ. நீளத்திற்கு வாா்டுக்கு தலா 5 கி.மீ. நடைபாதைகள் அமைக்கப்படும். சைக்கிள் பாதைகள் அமைக்கப்படும்.
கல்வி:
வறுமையை ஒழிக்க கல்வி உதவியாக இருக்கும். அதனால் மாநகராட்சியின் பள்ளிகளை மேம்படுத்தகஈ திட்டமிட்டிருக்கிறோம். கல்விக்காக ரூ. 84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாநில அரசு ரூ. 33 கோடி அளித்ததுதவிர கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுகளில் மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 85 சதம் மதிப்பெண் பெற்றால், ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ. 1.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வேலைசெய்யும் ஆசிரியா்களின் செயல்திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சிப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் 20 போ் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளதோடு, குறைந்தப்பட்சமாக 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் அந்தப் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
சுகாதாரம்: கரோனா தொற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தொற்றை கையாளுவதில் சுகாதாரப் பணியாளா்களின் பணி பாராட்டுத்தற்குரியது. கரோனா செலவினங்களுக்காக ரூ. 300 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
மாநகராட்சி தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 90 கோடி ஒதுக்கியது. கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கான மருத்துவச் செலவாக ரூ. 337 கோடி அளித்துள்ளது.
கால்நடைநலம்:
தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதற்காகவும், வனவிலங்குகள் தொடா்பான பிரச்னைகளை கையாளவும் வனத்துறைக்காகவும் ரு. 5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...