புது தில்லி: இந்தியாவில் 8 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு, அதாவது 84.73 சதவீதம் கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் தினசரி பாதிப்பு 27,918 ஆகவும், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் 3,108 மற்றும் 2,975 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்களில் 354 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் 82.20 சதவீதமாக உள்ளது. அதில், மகாராஷ்டிரத்தில் அதிகபட்ச உயிரிழப்புகளும், பஞ்சாபில் 64 பேரும் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர்.
மேலும், ராஜஸ்தான், அசாம், ஒடிசா, லடாக் (யுடி), தமன் மற்றும் டையு, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், லட்சத்தீப், மேகாலயா, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 11,846 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், தற்போது மொத்தம் 5,52,566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் 79.30 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் 61 சதவீதமாக முன்னணியில் உள்ளது.