கரோனா தொற்று பாதிப்பிற்காக வெளிநாட்டிடமிருந்து பெறப்படும் உதவிகள் எங்கே செல்கின்றன என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா தொற்று சிகிச்சைக்காக உலக நாடுகள் பலவும் மருந்துகள், ஆக்சிஜன் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து வெளிப்படைத் தன்மையை மத்திய அரசு கடைபிடிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில், “இந்தியாவிற்கு எந்தவிதமான பொருள்கள் கிடைத்துள்ளன? அவைகள் எங்கே? அவைகளால் பயனடைபவர்கள் யார்? மாநிலங்களுக்கு எப்படி வழங்கப்படுகிறது? மருத்துவ உதவிகள் குறித்து ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இவைகள் குறித்து மத்திய அரசிடம் ஏதேனும் பதில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் இதுவரை 2 கோடியே 6 லட்சத்து 98 ஆயிரத்து 476 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.