ஹைதராபாத் நகரைச் சேர்ந்த 110 வயதான முதியவர் ஒருவர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நோக்கி படையெடுப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் ஹைதராபாத்தில் முதியவர் ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராமானந்த தீர்த்தா. இவருக்கு வயது 110. இந்நிலையில் கடந்த ஏப்ரம் 14ஆம் தேதி கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட இவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவப் பரிசோதனை முடிவில் தீர்த்தாவிற்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 18 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய தனியார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாராவ், “இன்னும் சில தினங்களில் அவர் சாதாரண படுக்கைக்கு மாற்றப்படுவார்” எனத் தெரிவித்தார்.
110 வயதான முதியவர் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தது பலருக்கும் நம்பிக்கையை விதைத்துள்ளது