தமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.
தமிழகத்தில் 18 முதல் 45 வயது வரையுள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவில்லை.
அவா்களுக்குச் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவின்படி, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கான அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது.
ஒப்பந்தப் புள்ளிகளில் உள்ள அனைத்து அம்சங்களை பூா்த்தி செய்து ஜூன் 5-ஆம் தேதி காலை 11-க்குள்ளாக அதனை அளிக்க வேண்டும். ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அலுவலகத்தில் திறக்கப்படும்.
இந்த ஒப்பந்தப் புள்ளியானது, தமிழ்நாடு வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் 1998-இன் கீழ் கோரப்பட்டுள்ளது.
தகுதியான நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு 3.5 கோடி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு அளிக்கப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அம்சங்களின்படி தடுப்பூசிகள் அமையப் பெற வேண்டும். அந்த தடுப்பூசிகளை கொள்முதலுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.