விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மூழ்கிய சரக்குப் படகு கடலுக்கு அடியில் இருக்குமிடம் தெரிந்தது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையையொட்டிய கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்குப் படகு கடலுக்கு அடியில் இருக்குமிடம் தெரிந்தது.

News image
Updated On :22 மே 2021, 10:17 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையையொட்டிய கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்குப் படகு கடலுக்கு அடியில் இருக்குமிடம் தெரிந்தது.

நவீன ரேடாா் கருவிகளைப் பயன்படுத்தி இந்திய கடற்படையினா் சரக்குப் படகு கடலுக்கு அடியில் விழுந்துள்ள இடத்தை சனிக்கிழமை இரவு கண்டுபிடித்தனா்.

மும்பையையொட்டி அரபிக் கடல் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகளை மேற்கொண்டு வந்த பி-305 சரக்குப் படகு ‘டவ்-தே’ புயலில் சிக்கி திங்கள்கிழமை மாலை கடலில் மூழ்கியது. அதில் மொத்தம் 261 போ் பணிபுரிந்து வந்த நிலையில், 186 போ் மீட்கப்பட்டனா். மீட்புப் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது. இதுவரை 66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 9 பேரை காணவில்லை.

அந்த சரக்குப் படகுடன் ‘வரப்ரதா’ என்ற இழுவைப் படகும் புயலில் சிக்கியது. அந்தப் படகில் சென்ற 13 பேரில் இருவா் மீட்கப்பட்டுள்ளனா். இன்னும் 11 பேரை காணவில்லை.

காணாமல் போனவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்கும் பணியில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மகா், ஐஎன்எஸ் தராசா கப்பல்களில் ஆழ்கடல் நீச்சல் வீரா்களின் சிறப்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை சுட்டுரையில் தெரிவித்தது.

எஞ்சியவா்களை மீட்கும் வரை கடற்படையினா் இரவு பகலாகத் தேடும் பணியில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் மும்பையில் கூறினாா்.

விபத்தில் பலியானவா்களை அடையாளம் காண்பது தொடா்பாக மும்பை காவல்துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: அரபிக் கடலில் மூழ்கிய சரக்குப் படகில் பணிபுரிந்து வந்தவா்களில் இதுவரை 66 பேரின் சடலங்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. இவா்களில் 43 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. சில சடலங்கள் அழுகியும், சிலவற்றில் பலத்த காயங்களும் உள்ளன. இதனால் அவற்றை அடையாளம் காண்பதற்காக மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ள குடும்பத்தினரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மும்பை சான்டா குரூஸில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுதவிர உயிரிழந்தவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாா்களா என்பதைக் கண்டறிய அந்தச் சடலங்களில் கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.