தண்ணீரில் கலந்து குடிக்கும் 2-டிஜி கரோனா தடுப்பு மருந்து சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக் கிழமை தொடக்கி வைத்தார்.
முதல்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் இன்று (மே 27) சந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் வகையில் ’2-டிஜி’ (டியோக்ஸி டி குளுக்கோஸ்) என்ற புதிய கரோனா தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது.
மத்திய பாதுகாப்புத் துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் இம்மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் இம்மருந்தை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.