தில்லியில் மே 31 முதல் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி: கேஜரிவால்
புது தில்லி: தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் மே 31 முதல் புது தில்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், தொழிற்சாலைகளை இயக்கவும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.
புது தில்லியில் இன்று மக்களிடையே உரையாற்றிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,100 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. தற்போது மருத்துமனைகளிலும் படுக்கை வசதிகள் காலியாக உள்ளன. எனவே, தற்போது தில்லியில் தளர்வுகளை அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது.
எனவே, தில்லியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், தொழிற்சாலைகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ள கேஜரிவால், மீண்டும் கரோனா அதிகரித்தால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.