தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் வளாகங்களை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் ஆகியவை கட்டப்பட்டு வடக்கு மற்றும் தெற்கு பிளாக்கில் இயங்கிவரும் நிதித்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டுவருகிறது. கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்க்கட்சிகள், கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் அரசு கட்டிடங்கள் கட்ட வேண்டுமா என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதை கடுமையாக விமரிசித்துள்ள மோடி, "முக்கியத்துவம் வாய்ந்த சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு எதிராக சிலர் நாச வேலையில் ஈடுபட முயற்சிக்கின்றனர். தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்கள் பொய்யான தகவல்களை பரப்பிவருகின்றனர். ஆனால், அமைச்சரவை அலுவலகங்களின் கட்டிடங்கள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அவர்கள் ஒருமுறை கூட பேசியதில்லை.
பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் வளாகங்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் ஒரு முறை கூட பேசியதில்லை. அப்படி செய்திருந்தால், அவர்களின் பொய்களும் திட்டமும் அம்பலப்பட்டுவிடும்
மத்திய தில்லியில் உள்ள கஸ்தூர்பா காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்கா அவென்யூவில் உள்ள இரண்டு வளாகங்களில் 7,000 அலுவலர்கள் தங்கும் வகையில் புதிய பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு அளிக்கும் முன்னுரிமை, கெளரவம் இதன்மூலம் பிரதிபலிக்கிறது" என்றார்.