தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை என்று ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பேப்பர் வடிவிலோ அல்லது மொபைலிலோ எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சியின் கீழ் உள்ள பொதுப்போக்குவரத்துகளில், பொது கட்டிடங்கள், அரசு சார்ந்த பொது இடங்களில் சரிபார்க்கப்படும்.
அதன்படி, தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதியில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பராமரிப்பில் உள்ள பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் கூறும்போது, 'கரோனா தொற்றுநோய்க்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி. தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டிடங்களில் நுழைய அனுமதியில்லை' என்றார்.
மாநகராட்சியின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். 'இது ஒரு நல்ல முன்முயற்சி. அரசு மற்றும் நிர்வாகத்தின் இந்த வகையான கடுமையான முடிவுகளே மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நகரமே பாதுகாப்பாக இருக்க முடியும்' என்று மக்கள் தெரிவித்தனர்.