மீரட்டில் புதிதாக ஒரேநாளில் 26 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், மீரட் நகரில் புதிதாக 26 பேருக்கு புதிதாக ஒரேநாளில் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் தற்போது 115 பேர் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 'இன்று (செவ்வாய்க்கிழமை) 26 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெங்கு பாதிப்பு 115 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 116 பேர் டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 62 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
மேலும், 'தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் காய்ச்சல் நோயாளிகளை விசாரித்து வருகிறோம். வீடுகளில் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு பாதிப்பு இப்போது குறைந்து வருகின்றது. தூய்மையை பராமரிக்க மக்களை வலியுறுத்தி வருகிறோம். நெறிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.