பஞ்சாபில் மின் கட்டணம் செலுத்த முடியாத 53 லட்சம் குடும்பங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி புதன்கிழமை தெரிவித்தார்.
பஞ்சாப் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேசியது:
பஞ்சாபில் மின் கட்டணம் செலுத்தமுடியாத 53 லட்சம் குடும்பங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். மொத்த மின் இணைப்பு உள்ளவர்களில் 75-80 சதவீதம் பேர் 2 கே.டபள்யூ. பிரிவின் கீழ் உள்ளார்கள். அவர் கடைசி மாதக் கட்டணம் மாநில அரசே ஏற்கும். மின் கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும்.
பஞ்சாப் கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறேன். அப்பகுதிகளில் மின்சாரம் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. அங்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் பல இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சித்து ராஜிநாமா குறித்து அவரிடம் தொலைபேசியில் பேசியதாகவும், எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.