போபால்: நாட்டில் கரோனாவின் இரண்டாவது அலை.. இல்லை இல்லை பேரலை கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
ஒரு பக்கம் கரோனா பாதிப்பு கடுமையாக உயரும் அதே வேளையில், மாநில அரசு அளிக்கும் பலி எண்ணிக்கையும், சுடுகாடுகளில் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் வேறுபடுகிறது.
இதையும் படிக்கலாமே.. கரோனா அறிகுறி இருந்தால் என்ன செய்வது? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்
தலைநகர் போபாலில், கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை என்று மாநில அரசு ஒரு எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆனால் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கையும், புதைக்கப்படும் எண்ணிக்கையும் அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
போபாலில் இருக்கும் மூன்று இடங்களில், ஏப்ரல் 16 முதல் 20 வரை 597 உடல்களுக்கு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில் இதுவரை 348 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது. கிட்டத்தட்ட இது பாதி அளவு குறைவாகும். ஆனால், அரசு அளிக்கும் புள்ளி விவரங்கள் தவறு என்பதை மறுக்கின்றனர் உயர் அதிகாரிகள்.
இது குறித்து போபால் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேறகொள்ள நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்வி அமைச்சர் விஷ்வாஸ் சரங்க கூறுகையில், கரோனா பலி எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை, பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்தால் எங்களுக்கு எந்த விருதும் கிடைக்கப்போவதில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், புதன்கிழமை ஒரே நாளில் 13,107 பேர் புதிதாக கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒரே நாளில் 75 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது மாநில கரோனா புள்ளி விவரம்.