பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா?- எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா விளக்கம்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க, பூஸ்டர் டோஸ் எனப்படும் கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை தேவையை இந்தியாவின் தரவுகள் உணர்த்தவில்லை.
பிரபல நுரையீரல் நிபுணர் மற்றும் தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா
பிரபல நுரையீரல் நிபுணர் மற்றும் தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா

புதுதில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க, பூஸ்டர் டோஸ் எனப்படும் கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை தேவையை இந்தியாவின் தரவுகள் உணர்த்தவில்லை என பிரபல நுரையீரல் நிபுணர் மற்றும் தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று எதிரான நடவடிக்கையில், கரோனா தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் பெரும்பாலும் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் கரோனா நோய்த்தொற்று உருமாற்றம் அடைந்து வருவதால், கூடுதல் பாதுகாப்பிற்காக பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் உள்பட பல நாடுகள் தங்கள் மக்களின் அதிக அளவு பாதுகாப்பு மற்றும் தொற்று எதிர்ப்பு சக்திகளுக்காக தடுப்பூசிகளின் மூன்றாவதாக  'பூஸ்டர்' தவணை தடுப்பூசியை செலுத்த முடிவு எடுத்துள்ளன. 

அதாவது தடுப்பூசியின் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திய சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் தவணையை செலுத்த முடிவு எடுத்துள்ளன.

இருப்பினும், இதற்கு உலக சுகாதர அமைப்பு போன்ற உலகளாவிய மருத்துவ அமைப்புகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவை பல வளரும் நாடுகளில் தடுப்பூசி கிடைக்காமல் உள்ள நிலையை சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணிக்காக மற்ற நாடுகளை இன்னும் நம்பியுள்ளனர் என தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் இந்தியாவிலும் மூன்றாவது தவணையாக 'பூஸ்டர்' தவணை தடுப்பூசி செலுத்தப்படுமா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 

இது குறித்து பிரபல நுரையீரல் நிபுணர் மற்றும் தில்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்க, பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது கரோனா தடுப்பூசியின் தேவை இருப்பதற்கான தரவுகளை இந்தியாவின் தரவுகள் உணர்த்தவில்லை. 

'பூஸ்டர்' தவணை தடுப்பூசியின் செயல்திறன் குறித்த போதிய தரவுகள் தற்போது இல்லை என்றும் தரவுகள் வெளியான பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும். 

பூஸ்டர் தவணை தடுப்பூசி குறித்த அதிக ஆராய்ச்சிகள் தேவைதான். அது குறித்த முடிவுகள் வெளிவருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். 

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பூஸ்டர் தவணை தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகள் வெளியாகும் என்று நம்புவதாகவும், அனைவருக்கும் முடிந்தளவு தடுப்பூசி செலுத்திய பிறகும், தடுப்பூசியின் திறன் குறைந்து வரும் நிலையை அடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டியவுடன் பூஸ்டர் தவணை செலுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கலாம்.

"உலகளவில், இந்தியா உள்பட தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு இருப்பதை காணமுடிகிறது, மேலும் பெரியளவில் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை" என்று அவர் கூறினார்.

இந்த வாரம் அறிவிப்பின்படி, காலப்போக்கில் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறைகிறது என்பதைக் காட்டும் தரவுகளை மேற்கோள் காட்டி, அமெரிக்காவில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும். மூன்றாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 20 முதல் அமெரிக்காவில் கிடைக்கும், ஏனெனில் அமெரிக்கா மற்றும் கனடாவில்  மாறுபாடு அடைந்த டெல்டா வகை தொற்று அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com