பெங்களூரு: பெங்களூருவில், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மருத்துவருக்கு, மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பதாகவே பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட 15 நாள்களுக்குப் பிறகு பரிசோதிக்கும் போது தொற்று இல்லை என்றுதான் முடிவுகள் வரும். ஆனால், இந்த மருத்துவருக்கு 15 நாள்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா இருப்பதாகவே பரிசோதனை அறிக்கைகள் காட்டுகின்றன.
அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்து ஒருவருக்கும், மேலும் இரண்டு பேருக்கும் கரோனா இல்லை என்றே முடிவுகள் வந்துள்ளன.
இதையும் படிக்கலாமே.. 2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு
மயக்கமருந்து நிபுணரான இந்த மருத்துவர், தனக்கு கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்ததும், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்ற விருப்பத்தோடு இருந்த நிலையில், அவருக்கு கரோனா இருப்பதாகவே அறிக்கை வந்திருப்பதால், மேலும் சில நாள்கள் மருத்துவமனையிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு 24 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரும், அவருடன் தொடர்பிலிருந்தவர்களும், மருத்துவமனையில் தனித்தனி வார்டுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
அனைவரின் உடல்நிலையும் சீராகவே உள்ளது. யாருக்கும் எந்த உடல்நலப் பாதிப்பும் இல்லை.
ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மருத்துவர் நீரிழிவு பாதித்தவர். அதனால்தான் இன்னமும் பரிசோதனையில் கரோனா இருப்பதாக முடிவுகள் வரலாம் என்று கருதப்படுகிறது. டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் பாதிப்புகளின்போதும் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். அப்போது 21 நாள்களுக்குப் பிறகு கூட கரோனா பாதிப்பு இருப்பதாகவே பரிசோதனை முடிவுகள் காட்டின என்கிறார்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்.