விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த குர்னம் சிங் சாருனி தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்திய அரசு போதிய நிவாரணங்களை அறிவிக்கவில்லை.
வேளாண் போராட்டங்களுக்கு எதிராக உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்காக பஞ்சாப் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளில் பாதியளவு கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு பஞ்சாபை உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.