1,000 முதல் 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அணு ஆயுதங்களை கொண்டு தாக்கி அழிக்கும் அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து அரசு தரப்பு, "ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றுள்ளது. அக்னி வகைகளில் அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையாக அக்னி பிரைம் திகழ்கிறது.
1,000 முதல் 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணையில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏவுகணை சோதனையானது அதன் அனைத்து பணி நோக்கங்களையும் உயர் மட்ட துல்லியத்துடன் பூர்த்தி செய்தது" என தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணையின் முதல் சோதனை கடந்த ஜூன் 28ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில், ஏவுகணை கிட்டத்தட்ட தயார் நிலையை எட்டியுள்ளது. எனவே, பாதுகாப்பு படையில் இணைத்து கொள்ளும் பணி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதிய தொழில்நுட்பங்களையும் திறனையும் மேம்படுத்துவதன் மூலம் ஏவுகணை திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. சமீபத்தில், அக்னி 5 ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.