இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவிஷில்ட், கோவேக்ஸின் மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,
இந்தியாவில் ஒரே நாளில் கோர்பிவேக்ஸ் மற்றும் கோவோவேக்ஸ் என்கிற கரோனா தடுப்பூசி, மால்னுபிரவிர் என்ற கரோனா சிகிச்சைக்கு உதவும் மாத்திரை ஆகிய 3 மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியாகும்.
18 வயதுக்கு மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் மால்னுபிரவிர் என்ற மாத்திரை இந்தியாவில் உள்ள 13 நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.