சர்வதேச விமானங்கள் தில்லிக்கு அதிகம் வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 241 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 540 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக தில்லியில் 238 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 167 பேருக்கும், குஜராத்தில் 73 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில்,
தில்லி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சில பயணிகளுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் சில நாள்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நீண்ட நாள்கள் அவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டியுள்ளது. மாவட்ட அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர்
சர்வதேச விமானங்கள் நாட்டிற்குள் நுழைவதாலேயே ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முந்தைய கரோனா அலைகளின் போது கூட, வெளிநாட்டில் இருந்து வருவோரால் தான் பரவல் எண்ணிக்கை அதிகரித்தது.
தில்லியில் புதன்கிழமை 238 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.