தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.
தில்லி ஜல்சக்தித் துறை அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மேக்கேதாட்டு அணை விவகாரம், காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் துரைமுருகன் விவாதித்தார்.
மேலும், கேரளம், ஆந்திரம் மாநிலங்களுடனான நதி நீர் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நீர்வளத் துறைக்காக தமிழகம் மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஷெகாவத்திடம் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேக்கேதாட்டு அணையை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்திற்காக காவிரியில் நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் முடிவை கைவிட கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் கோரிக்கை வைத்தார்.