கர்நாடக பாஜக தலைமை விவகாரத்தில் எவ்விதக் குழப்பமும் இல்லை என முதல்வர் பிஎஸ் எடியூரப்பா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக எடியூரப்பா தெரிவித்தது:
"கர்நாடக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் இங்கு வருகிறார். அவர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவுள்ளார். யார் வேண்டுமானாலும் தன்னைச் சந்திக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்துத் தகவல்களையும் அவர் விரிவாக சேகரிப்பார்.
அவர் இரண்டு நாள்கள் இங்கு இருப்பார். நானும் அவருடன் இருந்து தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவேன்.
கட்சித் தலைமை மட்டுமில்லாது வேறு எந்தவொரு விவகாரத்திலும் இங்கு குழப்பம் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். ஒன்றிரண்டு பேர் (சட்டப்பேரவை உறுப்பினர்கள்/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள்) விரக்தியில் இருக்கலாம். நாங்கள் அவர்களை அழைத்துப் பேசுவோம்."
3 நாள் பயணமாக புதன்கிழமை கர்நாடகம் வரும் அருண் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கிறார். மேலும் பாஜக மையக் குழுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.