இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரணாவத்தின் பத்ம விருதை திரும்பப் பெறுவதுடன் அவரைக் கைது செய்ய வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் பிரபல தனியார் செய்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியா 1947ஆம் ஆண்டு பெற்றது வெறும் பிச்சை எனவும், 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான போதுதான் உண்மையில் சுதந்திரம் அடைந்தது எனவும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இந்திய சுதந்திரம் குறித்த கங்கனாவின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கங்கனா ரணாவத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கங்கனா ரணாவத்தின் பேச்சை கடுமையாக கண்டிக்கிறேன். அவரின் கருத்து சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் செயல். மத்திய அரசு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை உடனடியாகத் திரும்பப் பெறுவதுடன் அவரை கைது செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.