ராஜஸ்தானில் பாஜக எம்எல்ஏ-வுக்கு எதிராக 37 வயது பெண் புகார் அளித்ததையடுத்து, அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோகுண்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரதாப் பீல். அவர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதயப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியது:
"கோகுண்டா எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அம்பாமாதா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது."
தனக்கு வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வழக்கறிஞர் மூலம் உதய்ப்பூர் காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றம் செய்ததற்காக ஏற்கெனவே ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, கடந்த 10 மாதங்களில் கோகுண்டா எம்எல்ஏ பிரதாப் பீல் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது பாலியல் வழக்கு இது.
பிரதாப் பீல் மீதான இரண்டு பாலியல் குற்றங்களுக்கான விசாரணையையும் சிஐடி விசாரித்து வருவதாகக் காவல் துறை தெரிவித்தது.