பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உத்தரப் பிரதேச தலைநகரம் லக்னெளவில் நடைபெற்ற மாநில காவல்துறை தலைவர்கள் மற்றும் ஐஜிக்களின் 56ஆவது மாநாட்டில் இன்று கலந்து கொண்டனர். காவல்துறை தலைமையகத்தில் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுத காவல் படை மற்றும் மத்திய காவல்துறை அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் நேரடியாக கலந்து கொள்கின்றனர். இந்திய உளவுத்துறை, சிறப்பு புலனாய்வுத்துறையை சேர்ந்த மற்ற அழைப்பாளர்கள் இணையம் வழியாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சைபர் குற்றம், தரவு நிர்வாகம், பயங்கரவாத எதிர்ப்பு, இடதுசாரி தீவிரவாதம், போதை பொருள் கடத்தல், சிறை சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
2014ஆம் ஆண்டு, பிரதமராக பொறுப்பு ஏற்றதிலிருந்தே, மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டுக்கு மோடி முக்கியத்துவம் அளித்துவருகிறார். மாநாட்டின் அனைத்து அமர்வுகளிலும் கலந்து கொள்ளும் மோடி, சுதந்திரமாக பேசவும் அதிகாரப்பூர்மற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் காவல்துறை தலைவர்களை ஊக்குவித்துவருகிறார். அதேபோல், நாட்டை பாதிக்கும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகள், முக்கியமான கொள்கை முடிவுகள் குறித்து கேட்டறிந்துவருகிறார்.
மோடியின் அறிவுறுத்தலின்படியே, 2014ஆம் ஆண்டு முதல், வழக்கமாக தில்லியில் நடத்தப்பட்டுவந்த வருடாந்திர மாநாடுகள் மற்ற மாநிலங்களில் நடத்தப்பட்டுவருகிறது. 2020ஆம் ஆண்டு மட்டும், மாநாடு இணைய வழியாக நடைபெற்றது.