ஹரியாணா மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் அசோக் தன்வார் செவ்வாய்க்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கம் மட்டுமின்றி திரிபுரா மற்றும் கோவா மாநிலங்களிலும் தங்களது கட்சியை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள கோவா பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | திரிணமூலில் இணைகிறாரா காங். தலைவர் கீர்த்தி ஆசாத்?
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அசோக் தன்வார் இன்று திரிணமூலில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரிணமூல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி 4 நாள்கள் பயணமாக தில்லி சென்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் இன்று திரிணமூலில் இணையவுள்ளனர்.