லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | உ.பி.: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 போ் பலி
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வன்முறைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து, உ.பி. வன்முறை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது.
வன்முறைக்குக் காரணமான மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டுமெனவும் தங்களுடைய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்மந்தப்பட்டவர்கள்அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் உறுதி அளிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது