பாட்னா: பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் ஏடிஎம்- இயந்திரத்தில் வைக்கக் கொண்டு வரப்பட்ட பணம் இருந்த வேன் கடத்தப்பட்ட சம்பவத்தில், கொள்ளையனின் தாயும் சகோதரியும் தற்கொலை செய்து கொண்டனர்.
சோனு என்ற இளைஞர், பிகார் மாநிலம் சரன் பகுதியில் ஏடிஎம் பணம் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரைத் தேடி காவல்துறையினர் வீட்டுக்கு வருவதை அறிந்த அவர் தப்பியோடிவிட்டார். வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர் சுமார் 60.5 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர்.
இதையும் படிக்கலாமே.. பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில்தான், சோனுவின் தாய் மற்றும் சகோதரி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதிய 4 பக்க தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது.
மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், தற்கொலை செய்து கொண்ட பெண் எழுதிய நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தில், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தனது சகோதரன் பற்றி அக்கம்பக்கத்தாரின் பேச்சுகளால் அவமானம் அடைந்து, அவமரியாதையோடு வாழ விரும்பவில்லை. அவர்கள் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்கள். அதனால்தான் இந்த துயர முடிவை எடுக்கிறோம். நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை தயவுகூர்ந்து காவல்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். எனது தந்தையால், மகனை கட்டுப்படுத்த முடியவில்லை. மகன் செய்த தவறுக்கு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். மகனை சரியாக வளர்க்காததுதான் அவர் செய்த குற்றம் என்று எழுதியுள்ளார்.
விசாரணையில், சோனுவுக்கு பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையது தெரிய வந்துள்ளது. அவனது கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.