தில்லி லக்ஷ்மி நகரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி 10 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசித்து வருவதாக தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவு துணை ஆணையர் (டிசிபி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி மேலும் கூறியது:
"பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அஸ்ரஃப் என்பவர் தில்லி காவல் துறை சிறப்புப் பிரிவால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவின் அடையாள அட்டைகளைக் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில் அவர் 'ஸ்லீப்பர் செல்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளது" என்றார் அவர்.
இதையும் படிக்க | தில்லியில் கடந்த 10 நாள்களில் 139 பேருக்கு டெங்கு பாதிப்பு
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவர் இங்கு 6 மாதங்கள்தான் வசித்தார். ஆவணங்களுக்காக எனது தந்தை அவரது ஆதார் அட்டையை வாங்கினார். அவர் கிளம்பிய பிறகு நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை. தேவைப்பட்டால் காவல் துறையினருக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்" என்றார்.
முன்னதாக, அவரைக் கைது செய்தபோது அவரிடமிருந்த போலி ஆவணங்கள், ஏகே-47 ரக துப்பாக்கி, கையெறி குண்டு உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.