ஃபிலிப்கார்ட் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ரூ.51,999 விலையுள்ள ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு இரண்டு சோப்பு வில்லைகள் வந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மிக விலையுயர்ந்த ஐஃபோனை வாங்கிய மகிழ்ச்சியில், அது வீட்டுக்கு வரும் நாளை எதிர்பார்த்திருந்தார். அந்த நாளும் வந்தது. ஆனால், ஆனந்தத்தை விட அது கடும் அதிர்ச்சியை அளிக்கப் போகிறது என்று அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங், ஃபிலிப்கார்ட் மூலமாக ஆர்டர் செய்த ஐஃபோன் வந்ததும், அதனைக் கொண்டு வந்த நபரிடம், பெட்டியை பிரிக்குமாறு கூறி, விடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெட்டியைப் பிரிக்கும் போது அதில் ஐஃபோனுக்குப் பதிலாக இரண்டு நிர்மா சோப்புக் கட்டிகள் இருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிக்கலாமே.. ஆன்லைனில் பொருள்கள் வாங்குவோர் இதைச் செய்ய மறக்காதீர்
பொருளை பெற்றதற்கான ஓடிபியை, பகிர்ந்து கொள்ள மறுத்த சிம்ரன்பால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரை ஏற்றுக் கொண்ட நிறுவனம், ஒரு சில மணி நேரங்களில், அவர் செலுத்திய தொகையை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்து, உடனடியாக அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஃபிலிப்கார்ட் என்ன சொல்கிறது?
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், ஃபிலிப்கார்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்த கேட்டதற்கு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிரான ஒரு விஷயத்தையும் ஃபிலிப்கார்ட் ஏற்றுக் கொள்ளாது. இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் வந்ததும் உடனடியாக எங்களது குழுவினர் அங்குச் சென்று அவருடன் பேசி, முழுத் தொகையும் அவருக்கு திரும்ப வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதனை கொண்டு வருபவரே பிரிக்கச் சொல்லி, விடியோ எடுப்பது சிறந்தது என்கிறார்கள்.
விலை உயர்ந்த பொருள்களைக் கொண்டு வரும் நபரையே அதனைப் பிரித்துப் பார்க்கச் சொல்லும் வசதியை ஃபிலிப்கார்ட் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விடியோ மற்றும் புகைப்படங்களை ஃபிலிப்கார்ட் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளும்.
ஒரு வேளை வேறு பொருள்கள் வந்துவிட்டால் அதனை மாற்றித் தரவோ, பணத்தைக் கொடுக்கவோ முன் வரும். அவ்வாறு இல்லாவிட்டால், தேசிய நுகர்வோர் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் உதவி பெறலாம்.