ஆர்எஸ்எஸ் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேர, அதன் நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியாணா அரசு நீக்கியுள்ளது.
இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பு வகித்தபோது, நவம்பர் 30, 1966 அன்று ஹரியாணா சிவில் சர்வீஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) விதிகள் படி, அரசு ஊழியர்கள் கட்சி அல்லது அமைப்புகளில் சேர தடை விதிக்கப்பட்டது. பின்னர், 1975இல் அந்த தடை நீக்கப்பட்டு, 1980இல் மீண்டும் அமலுக்கு வந்தது.
மத்திய சிவில் சர்வீஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) 1964 விதிகள்படி, அரசு ஊழியர்கள் எவ்வித அரசியல் கட்சிகளிலோ அல்லது அமைப்புகளிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது என உள்துறை அமைச்சகம் நவம்பர் 30, 1966 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக்கூடாது. கூட்டங்களில் பங்கேற்க கூடாது. இதை மீறி, கட்சி அல்லது அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும் பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், 1975இல் அந்த தடை நீக்கப்பட்டு, 1980இல் மீண்டும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், ஹரியாணா அரசின் தலைமை செயலாளர் விஜய் வர்தன், அனைத்து துறைத் தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "ஹரியானா சிவில் சர்வீசஸ் (அரசு ஊழியர்களின் நடத்தை) 2016 விதிகளின்படி, அரசு ஊழியர்கள் அனைவரும் அரசியல் கூட்டங்கள் மற்றும் தேர்தல்களில் பங்கேற்பதற்கும், ஆர்எஸ்எஸ், ஜமா் இ இஸ்லாமி போன்ற அமைப்புகளில் சேருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 1967,1970,1980 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் தற்போதைய காலத்திற்குப் பொருத்தமற்றதாக இருப்பதால், அவை திரும்ப பெறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் பிப்ரவரி 28, 2019 அறிவிப்பின் படி, ஜமாத் - இ - இஸ்லாம் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட அமைப்புடன் அரசு ஊழியர் தொடர்பில் இருந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ், ஜமாத்-இ-இஸ்லாமி உள்பட 17 அமைப்புகளின் உறுப்பினராக அரசு அதிகாரிகள் இருந்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சமூக ஊடகங்களில் இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக ஏதேனும் பதிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவும் அதிகாரம் உள்ளது.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 23.94 கோடி பேர் பாதிப்பு
அதே சமயம், பல மாநிலங்களில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் 2006இல் பதவியேற்றதும், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வதற்கான தடையை நீக்கினார். 2015இல், சத்தீஸ்கர் அரசாங்கம், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியது. அதே போல, இமாச்சலில் முன்பு ஆட்சி புரிந்த பாஜக அரசு, இந்த தடையை 2008இல் நீக்கியது.