
கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தில் அரசு அதிகாரியின் வீட்டிற்கு திருடச் சென்ற திருடர்கள் வீட்டில் எதுவும் இல்லாததால் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தேவாச் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் திரிலோச்சன் சிங் கவுர். இவருக்கு சொந்தமான வீடு ஜெய்குவால் மாட்டத்தில் உள்ள கதேகான் நகரத்தில் உள்ளது. பணி நிமித்தமாக தேவாச் மாவட்டத்தில் திரிலோச்சன் தங்கியுள்ளதால் அவ்வப்போது தனது சொந்த வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | எந்த நாட்டில்தான் மக்கள் இறக்கவில்லை? சர்ச்சைக்குள்ளான பிரேசில் அதிபரின் பேச்சு
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது வீட்டிற்கு அவர் திரும்பியபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் திருடர்கள் கைப்பட எழுதிய கடிதத்தையும் அவர் கண்டெடுத்தார்.
அதில், “வீட்டில் எதுவும் இல்லை என்றால் வீட்டைப் பூட்டாதீர்கள்” என எழுதியிருந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் திரிலோச்சன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திருடர்களைத் தேடி வந்த காவல்துறையினர் குந்தன் தாக்கூர் (32) மற்றும் சுப்பம் ஜெய்ஸ்வால் (24) ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரகாஷ் என்ற இளைஞரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க | 19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் அமெரிக்க எல்லைகள்
திரிலோச்சனின் பூட்டப்பட்டிருந்த வீட்டில் ரூ.5,500 மட்டுமே இருந்ததால் கோபமடைந்து கடிதம் எழுதி வைத்ததாக திருடர்கள் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ரூ.4,000 பறிமுதல் செய்யப்பட்டது.
துணை ஆட்சியர் இல்லத்தில் திருடர்கள் திருட வந்து கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.