ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய - பாகிஸ்தான் எல்லைகளை கொண்டுள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்களின் எதிர் தாக்குதலில் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“ஜம்மு - காஷ்மீர் மக்களை பாதுகாப்பது சிஆர்பிஎஃப்-ன் பணி. நாங்கள் 24 மணிநேரமும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகிறோம். மேலும், பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம்.
சமீபத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பின், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எங்களின் முக்கிய பணியாக மக்கள் வசிக்கும் இடங்களை பாதுகாத்து தீவிரவாத தாக்குதல் நடக்காமல் தடுப்பதாகும்.
மேலும், 24 மணிநேர சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்களை சோதனை செய்த பின்பே அனுப்புகின்றோம்.”