பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் மாணவர்களை விடுதலை செய்ய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதையும் படிக்க | மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவு
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக தங்களது வாட்ஸ்ஆப் செயலியில் பாராட்டு தெரிவித்த காஷ்மீர் மாணவர்களை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்தது.
ஆக்ராவில் உள்ள ஜாக்தீஸ்பூர் காவல்நிலையத்தில் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிக்க | பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் கைது
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, “ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை கண்டிக்கத்தக்கது. பாஜகவின் போலி தேசபக்தி மூலம் இந்தியா என்ற கருத்தை புறக்கணித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மாணவர்கள் எந்தவிதமான முழக்கங்களையும் எழுப்பவில்லை எனத் தெரிவித்துள்ள முப்தி இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்த பாஜகவினர் மீது கல்லூரி நிர்வாகம் புகார் தெரிவிக்க வேண்டும் என மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.