மற்ற மாதங்களை முந்திய ஆகஸ்ட்: 18.6 கோடி பேருக்குத் தடுப்பூசி
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.6 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
நேற்று (ஆக. 31) ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மற்ற மாதங்களை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மற்ற எல்லா மாதங்களையும் முந்தியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடியோ ஒன்றை தமது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் மாதம் முழுவதும் 18.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் 13.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதே அதிகபட்சமாக இருந்தது. ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அதிகபட்சமாக 21 முதல் 27-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 4.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சராசரியாக ஒரு நாளில் 66.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் 50 சதவிகிதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டது. இது ஆகஸ்ட் 26-ம் தேதியன்று எட்டப்பட்டது.
ஹிமாசலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 29-ம் தேதியில் நடந்தது.
இலவச தடுப்பூசிக்காக 90 சதவிகிதம் கரோனா தடுப்பூசி வலைதள பக்கங்கள் அரசால் நிர்வகிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டன. சராசரியாக நாள்தோறும் 3.7 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
அங்கலேஷ்வர் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்ஸின் ஆகஸ்ட் 29-ம் தேதி பயன்பாட்டிற்கு பெறப்பட்டது.
அவசர கால பயன்பாட்டிற்காக சைகோவ்-டி என்ற கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளது.