
கோப்புப்படம்
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 54 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவித்தது:
"ஜூன் மாதத்தில் 279 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-க்கு மேல் பதிவாகி வந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி அடிப்படையில் தினசரி பாதிப்புகள் 100-க்கு மேல் பதிவாகி வரும் மாவட்டங்களின் எண்ணிக்கை 42 ஆகக் குறைந்துள்ளது.
கேரளத்தில் மட்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் மேல் உள்ளது. மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ளது.
இதையும் படிக்க | தீவிர பரவல் தன்மை கொண்ட புதிய வகை கரோனா: மும்பை விமான நிலையத்தில் விதிகள் மாற்றம்
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 54 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.
சிக்கிம், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசியையாவது செலுத்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஒருநாளைக்குப் போடப்படும் தடுப்பூசிகளின் சராசரி எண்ணிக்கை 59.29 லட்சம். கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன."